பலாப்பழத்தைப் பக்குவமாகப் பறித்த பலராமன்
பலாப்பழத்தைப் பக்குவமாகப் பறித்த பலராமன்
வழக்கமாகச் சந்திக்கும் இடத்தில் நந்தினியின் வருகைக்காகக் காத்திருந்தான்
பலராமன். எப்பொழுதும் நந்தினியும் அவள் தோழி கமலாவும் சேர்ந்தே வருவார்கள். அன்று,
வெகுநேரம் கழித்து, கமலா மட்டும் வந்தாள். ”நந்தினி வரவில்லையா?” என்று கமலாவைக் கேட்டான்
பலராமன். ”நந்தினி இனிமேல் வரமாட்டாள்.” என்று சொல்லிப் பலராமனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாள்
கமலா. “ஏன்? அவளுக்கு என்னாச்சு?” என்று ஆச்சர்யத்தோடும் சற்று பயத்தோடும் பலராமன்
கேட்டான். “இப்ப காலேஜ் எல்லாம் முடிஞ்சு போச்சு. அதனாலே அவ இப்ப எங்கேயாவது வெளியில
போகணுமுன்னா, அவ அம்மா லீலாவின் ஆயிரம் கேள்விகளுக்குப் பதில் சொல்லணும். அதுக்குப்
பயந்துதான் அவ வரல்லை. நீ காத்திருப்பியே
என்று உன்னிடம் தன் சூழ்நிலையைப் பற்றிச் சொல்லச் சொல்லி என்னை அனுப்பினாள்.” என்று
விளக்கம் அளித்தாள் கமலா.
”சொல்ல வேண்டியதை நந்தினி ஃபோன்ல சொல்லியிருக்கலாமே?” என்று கேட்டான்
பலராமன்.
”சொல்ல வேண்டிய செய்தி நிறைய இருக்கு, அதனாலேதான் என்னை அனுப்பினாள்.” என்றாள் கமலா.
கமலா சொல்லப் போவதைக் கேட்பதற்குப் பலராமன் மிகுந்த ஆவலுடன் “நந்தினியின் சூழ்நிலைன்னு
சொன்னியே அது என்னான்னு கொஞ்சம் விவரமாச் சொல்லு.”என்றான்.
”நந்தினி ரொம்ப பயந்த சுபாவம் உள்ளவள். எல்லாத்துக்கும் பயப்படுவா.
கரப்பான் பூச்சியைக் கண்டாப் பயந்து ஓடுவா. இருட்டைக் கண்டா பயப்படுவா. தெரியாதவங்ககிட்டப்
பேச ரொம்பத் தயங்குவா. எப்படியோ தெரியலை. உங்கிட்ட
மாத்திரம் பயமில்லாம பழகத் தொடங்கினா. அவுங்க அம்மா அவளை எங்கேயும் தனியாப் போகவிடமாட்டாங்க. காலேஜ்ல படிக்கிறப்ப தினமும் என்னோடத்தான் வருவா;
என்னோடத்தான் வீட்டுக்குப் போவா. இப்ப படிப்பு முடிஞ்சு போச்சு. அதனால அவளுக்கு எங்கேயும்
வெளியே போகவேண்டிய வேலை இல்லை.”
”நந்தினியோட அப்பா அம்மாவுக்கு அவ உன்னைக் காதலிக்கிறது தெரியாது.
படிப்பு முடிஞ்சுட்டதால அவளுக்கு இப்ப மும்மரமா மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சுட்டாங்க.
அவ அப்பா எப்பப் பாத்தாலும் ஷாடி.காம் (shaddi.com), டமில்மேட்ரிமனி.காம் (tamilmatrimony.com) போன்ற வெப்சைட்லதான் இருக்காரு.
அதனால, நீ அவளை நிஜமாவே காதலிச்சேன்னா, அவளைச் சீக்கிரம் கல்யாணம் செய்துக்கிறதுக்கு
ஏற்பாடு செய்ய வேண்டும்.” என்று கமலா கூறினாள்.
“கமலா, எனக்கும் நந்தினியைச் சீக்கிரமே கல்யாணம் செய்துகொள்ளணும்னுதான்
ஆசை. ஆனா அதுக்குக் கொஞ்சம் நாளாகும். நான் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னால என் தங்கச்சிக்குக் கல்யாணம் பண்ணிவைக்கணும்.”
என்று சற்றுக் கவலையோடு கூறினான் பலராமன்.
“நீ சொல்றது புரியுது. நீ
பலா மரம் பாத்திருக்கியா?” என்று கேட்டாள் கமலா.
“பாத்திருக்கேன். கிராமத்துலே எங்க தாத்தா வீட்டுக் கொல்லையிலே ஒரு
பெரிய பலாமரம் இருக்கு.” என்றான் பலராமன்.
”அதைச் சுத்தி வேலி இருக்குதா? என்று கேட்டாள் கமலா.
“ ஆமா. மூங்கில் வேலி இருக்குது. அதுக்கென்ன இப்ப?” என்று கேட்டான்
பலராமன்.
“சும்மாத்தான் கேக்கிறேன். அதுலே பலாப்பழம் இருக்குமா?”. என்று கேட்டாள்
கமலா.
”ஆமா.இருக்கும். எல்லாப் பழமும் வேர்லதான் இருக்கும்.” என்றான் பலராமன்.
“சில பலா மரங்கள் வேலிக்குள்ளே இல்லாம வெளியிலே இருக்கும். சில மரங்களிலே
பலாப்பழம் வேர்ல பழுக்காம கிளையிலதான் பழுக்கும். தெரியுமா?” என்று கேட்டாள் கமலா.
“அதெல்லாம் எனக்குத் தெரியும். நீ என்ன சொல்ல வர்ரேன்னுதான் எனக்குப்
புரியலை.” என்று குழப்பத்தோடு கூறினான் பலராமன்.
“சொல்றேன். உங்க தாத்தா வீட்டுக் கொல்லையில் உள்ள பலா மரம் மூங்கில் வேலியுடன் பாதுகாப்பா
இருக்கு. அதில் பழங்கள் வேரில் பழுப்பதால், அவை பார்வைக்கு மறைவாக உள்ளன. அவை கீழே விழுந்து உடைந்து சிதறுவதற்கு வாய்ப்பில்லை. அந்தப்
பழங்களை யாரும் எளிதாக எடுத்துக்கொண்டு போக முடியாது. உன்னுடைய காதல் வேர்ல பழுத்த
பழங்களைப் போன்றது. அது யாருக்கும் தெரியாது. அதைப் பற்றி யார் எதைப் பேசினாலும்
அது உன்னைப் பாதிக்காது. உன்னை யாரும் கட்டாயப்படுத்திக் கல்யாணம் செய்துகொடுக்க
முடியாது. ஆனால், வேலிக்குள் இல்லாத பலா மரங்களில் கொம்புகளில் பழுக்கும்
பலாப்பழங்கள் பாதுகாப்பில்லாததால் அவற்றை யாராவது பறித்துக்கொண்டு போகலாம். அந்த
மரத்துப் பழங்கள், கொம்புகளிலிருந்து கீழே விழுந்து
உடைந்து சிதறக் கூடியவை. நந்தினியின் காதல் பாதுகாப்பில்லாத மரத்தின் சிறிய கிளையில்
பழுத்துத் தொங்கும் பெரிய பலாப்பழத்தைப் போன்றது. அவளை வேறு யாராவது திருமணம் செய்துகொள்ளக் கூடும். பழத்தின் சுமை தாங்காமல் சிறிய கிளை
முறிவதைப் போல் காதல் மிகுந்தால் அவள் இறக்கவும் கூடும். முதிர்ந்த பழம் கீழே விழுந்து சிதறினால்
அதன் மணம் பரவுவதைப் போல், அவளுடைய காதலைப் பற்றிய செய்தி ஊரில் பரவத் தொடங்கலாம். அப்படிப்
பரவத் தொடங்கினால் அவளுக்குக் கெட்ட பெயர், குடும்பத்துக்கு அவமானம். அதனால, நீ
அவளைச் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும். நந்தினியை நினைச்சா எனக்குக் கவலையா
இருக்கு. எனக்குத் தெரிஞ்சதைச் சொல்லிட்டேன். நீ நந்தினியோட பேசு, ரெண்டு பேரும்
சேர்ந்து பேசி என்ன செய்யணுமோ அதைச் செய்யுங்க.” என்று சொல்லிவிட்டுக் கமலா
புறப்பட்டுச் சென்றாள்.
கமலா கூறியதைப் பற்றித் தீவிரமாகப் பலராமன் சிந்தித்தான். அவன் நந்தினியோடு
ஃபோனில் பேசி அவளுடைய சூழ்நிலையைப் பற்றிக் கேட்டான். அவளுடைய பெற்றோர் அவளுக்கு மாப்பிள்ளை
தேடிக்கொண்டிருப்பதாகவும், அந்த முயற்சியில் தன்னுடைய தாய்க்கும் தந்தைக்கும் கருத்து
வேறுபாடு இருப்பதாகவும் நந்தினி கூறினாள்.
”ஏன்? ரெண்டு பேருக்கும் அப்படி
என்ன கருத்து வேறுபாடு?”என்று கேட்டான் பலராமன்.
“எங்க அம்மாவோட தங்கச்சி மகளும், அண்ணன் மகளும் அமெரிக்காவிலே வேலை பார்ப்பவர்களைதக் கல்யாணம் செய்துகிட்டு
அங்கேயே இருக்காங்க. ரெண்டு வருஷத்துக்கு
ஒரு தடவை இங்கே வர்ராங்க. அவுங்க பெண்ணுங்க
அமெரிக்காவிலே இருப்பவங்களைக் கல்யாணம் செய்துகொண்டு அங்கே இருப்பதை அவுங்க ரொம்பப் பெருமையாகப் பேசுறாங்க. எங்க அம்மா, அவுங்க தங்கச்சி,
அவுங்க அண்ணி இந்த மூணு பேருக்கும் எப்பவும் எல்லா விஷயத்திலும் போட்டியும் பொறாமையும்தான்.
எங்க அம்மாவும் அமெரிக்காவிலே இருக்கிறதை ஒரு பெரிய விஷயமா நினைக்கிறாங்க. அதனால, என்னை அமெரிக்காவிலே
வேலை பார்க்கிற மாப்பிள்ளைக்குத்தான் கல்யாணம்
செய்து கொடுக்கணும்னு அம்மா ரொம்பப் பிடிவாதமா இருக்காங்க. என்னைவிட்டுப் பிரிஞ்சு இருக்கிறதுக்கு அம்மாவுக்குப்
பிடிக்காது. இருந்தாலும், அவுங்க அண்ணியும் தங்கச்சியும் பெருமையாப் பேசிப் பீத்திக்கிறதைப்
பாத்தா அம்மாவுக்கு ரொம்பப் பொறாமை. இப்படியும் ஒரு அம்மா இருப்பாங்களான்னு நீ நினைக்கலாம்.
எங்க அம்மா அப்படித்தான். அப்பாவுக்கு என்னை அமெரிக்காவுக்கு அனுப்புறதுல கொஞ்சம்கூட
விருப்பம் இல்லை. அம்மாவும் அப்பாவும் இப்படி
வேற வேற ஐடியா வைச்சிருக்கிறதுனால எனக்கு மாப்பிள்ளை பாக்கும் படலம் நீண்டுகொண்டே போகும்.
அது நமக்கு நல்லதுதான்.” என்று மகிழ்ச்சியோடு
கூறினாள் நந்தினி.
“நந்தினி, நான் உனக்கு ஒரு நல்ல சேதி சொல்லப் போறேன். இப்பதான் எனக்கு
ஃபோன் வந்தது. டாட்டா கன்சல்ட்டிங் கம்பெனியிலே
எனக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சிருக்கு. நான் அமெரிக்காவில வேலை பாக்கிறதுக்குச் சம்மதமான்னு
கேட்டிருக்காங்க. ஆனா அந்த வேலை ஒண்ணு அல்லது ரெண்டு வருஷத்துக்குத்தான் அமெரிக்காவிலே.
அதுக்கு அப்புறம் அநேகமாக இந்தியாவுக்குத்தான்
திரும்பி வந்து வேலை பாக்கணும்னு சொல்லியிருக்காங்க. நான் சரின்னு சொல்லப் போறேன்.
ஆனா முதல் ஆறு மாசத்திற்கு எனக்கு மும்பையிலே ட்ரைனிங்.” என்று உற்சாகத்தோடு கூறினான்
பலராமன்.
“தட்ஸ் கிரேட்! கங்கிரேச்சுலேஷன்ஸ்! அப்புறம் வேற என்ன பிளான்? என்று ஆவலோடு கேட்டாள் நந்தினி.
“நீ சொன்னதைக் கேட்டதுக்கு அப்புறம் இப்பதான் ஒரு சூப்பர் பிளான் தோணுச்சு.
நான் ஷாடி.காம், டமில்மேட்ரிமனி.காம் போன்ற இடங்களில் என்னைப் பத்திய தகவல்களைப் போட்டு,
தற்காலிகமாக, ஒரு வருடம் அமெரிக்காவில் வேலை. அதற்கப்புறம் இந்தியாவில் வேலை பாக்கப்போறேன்னு
எழுதப் போறேன். இதை உங்க அப்பா பாத்தா, புரிஞ்சுப்பாரு. என்னைப் பத்திய தகவலைக் கூறி,
உன் அபிப்பராயத்தைக் கேட்டா, நீ சம்மதம்னு சொல்லு. அம்மா நினைக்கிற மாதிரி நான் அமெரிக்கா
மாப்பிள்ளை. அப்பா விருப்பபடி நான் இந்தியா மாப்பிள்ளை. நான் உன் மனதிற்கேற்ற மாப்பிள்ளை.
எப்படி நம்ம பிளான்?” என்று மிகுந்த உற்சாகத்தோடு கேட்டான் பலராமன்.
“சூப்பர் பிளான். அப்படியே செய்யலாம். நீ இங்க இருந்தா உன்னை அப்படியே
கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்திருப்பேன். இப்ப, இந்தா ஒரு ஃபிளையிங் கிஸ்.” என்று
மகிழ்ச்சி பொங்கும் முகத்தோடு தன் முத்தத்தை வாட்ஸ்அப் வழியாக அனுப்பினாள் நந்தினி.
கிளையிலே தொங்கும் பலாப்பழத்தைப் பலராமன் பக்குவமாகப் பறித்தான்!
18. தோழி கூற்று
பாடியவர்:
கபிலர்.
கபிலர் இவர் அந்தணர் குலத்தில் பிறந்தவர். ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ என்று மாறோக்கத்து
நப்பசலையார் என்ற புலவரால் புகழப்பட்டவர் (புறநானூறு - 126). கபிலர் பாடியதாக 234 செய்யுட்கள் எட்டுத்தொகை நூல்களில் காணப்படுகின்றன. குறிப்பாக, இவருடைய பாடல்களில்,
புறநானூற்றில் 28 பாடல்களும், கலித்தொகையில் காணப்படும் குறிஞ்சிக் கலி எனப்படும் 29 பாடல்களும், குறுந்தொகையில் 28 பாடல்களும் கபிலர் (13, 18, 25, 38, 42, 87, 95, 100,
106, 115, 121, 142, 153, 187, 198, 208, 225, 241, 246, 249, 264, 288, 291, 312,
355, 357, 361, 385), நற்றிணையில் 20
பாடல்களும், அகநானூற்றில் 18
பாடல்களும், பதிற்றுப்பத்தில் 10
பாடல்களும் , ஐங்குறுநூற்றில் 100 பாடல்களும் உள்ளன. ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழின் இனிமையை
எடுத்துரைக்க, இவர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டுப் பத்துப்பாட்டில் உள்ளது. இவர்
குறிஞ்சித் திணைச் செய்யுட்கள் இயற்றுவதில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இவரால் பாடப்பெற்றோர்: அகுதை, இருங்கோவேள், ஓரி, செல்வக்
கடுங்கோ வாழியாதன், சேரமான் மாந்தரஞ் சேரலிரும்பொறை,
நள்ளி, மலையமான் திருமுடிக்காரி,
விச்சிக்கோன், வையாவிக் கோப்பெரும்
பேகன், வேள் பாரி.
சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பற்றி இவர் இயற்றிய பாடல்கள் பதிற்றுப்பத்தின்
ஏழாம் பத்தாக அமைந்துள்ளன.. இவர் இயற்றிய பாடல்களால் பெருமகிழ்ச்சி அடைந்த
செல்வக் கடுங்கோ வாழியாதன், நன்றா என்னும் குன்றேறி
நின்று கண்ணிற்கெட்டிய இடமெல்லாம் இவருக்குப் பரிசாக அளித்தது மட்டுமல்லாமல்
நூறாயிரம் பொற்காசுகளும் தந்தான். ஆனால்,
கபிலர் தான் பெற்ற பரிசையெல்லாம் பிறருக்கு அளித்து, வள்ளலாகவும் துறவியாகவும் வாழ்ந்தார்.
கபிலர் வேள் பாரியின் நெருங்கிய நண்பர். வேள் பாரி இறந்தபின், அவன்
மகளிர்க்குத் திருமணம் செய்விக்கும் பொறுப்பினை ஏற்றுக் கபிலர் பல முயற்சிகள்
செய்தார். முடிவில், பாரி மகளிரை ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் ஒப்படைத்துத் தான்
வடக்கிருந்து உயிர் நீத்ததாகக் கருதப்படுகிறது.
கபிலர் என்ற பெயருடைய வேறு சில புலவர்களும் இருந்ததாகத் தமிழ் இலக்கிய
ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கூற்று: இரவுக்குறி (இரவில்
தலைவனும் தலைவியும் சந்திப்பதற்காக் குறிக்கப்பட்ட இடம்)
வந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு, வரைவு
(வரைவு = திருமணம்) கடாயது (கடாவுதல் = தூண்டுதல்).
திணை: குறிஞ்சி.
கூற்று விளக்கம்: ஒருநாள்
இரவு,
தலைவன் தலைவியைக் காணவருகிறான். தலைவியைச்
சந்தித்துத் திரும்பிச் செல்லும் வழியில் தோழியைச் சந்திக்கிறான். தோழி, “தலைவியின் காதல் நோய் மிகவும் பெரிது.
அவளால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆகவே, அவளை நீ விரைவில் திருமணம் செய்துகொள்ள
வேண்டும்” என்று தலைவனை வேண்டுகிறாள்.
வேரல் வேலி
வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.
கொண்டு கூட்டு: வேரல்
வேலி வேர்க்கோள் பலவின் சாரல் நாட! சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு இவள் உயிர்தவச் சிறிது, காமமோ பெரிதே.
யார் அஃ து அறிந்திசினோரே? செவ்வியை
ஆகுமதி!
அருஞ்சொற்பொருள்: வேரல் = சிறு மூங்கில்; கோள் = குலை; பலவு = பலா;
சாரல் = மலைப்பக்கம்; செவ்வி = ஏற்ற சமயம், பருவம்; மதி – முன்னிலை
அசைச்சொல்; அறிந்திசினோர் = அறிந்தவர்;
கோடு = மரக்கொம்பு; தூங்கல் = தாழ்தல், தணிதல்;
தொங்குதல்; தவ = மிகுதி.
உரை: சிறு
மூங்கில்களாலாகிய வேலி உள்ள இடத்தில், வேரிலே
பழங்களைக் கொண்டிருக்கும் பலா மரங்கள் செறிந்திருக்கும் பக்கத்தையுடைய மலை நாடனே!
பக்கமலையில் உள்ள பலாமரத்தின் சிறிய கொம்பில், பெரிய பழம் தொங்கியது போல, இத்தலைவியினது,
உயிரானது மிகச் சிறியது; ஆனால், இவள் காமநோய் மிகப் பெரிது; அதை அறிந்தவர்
யார்? உன்னைத் தவிர வேறு ஒருவரும் இல்லை. ஆகவே, நீ அவளைத் திருமணம் செய்துகொள்ளும்
பருவத்தை உடையவனாகுக! அதாவது, நீ
விரைவில் அவளைத் திருமணம் செய்துகொள்வாயாக!
சிறப்புக் குறிப்பு: இப்
பாடலில் குறிஞ்சி நிலத்தில் காணப்படும் இயற்கைக் காட்சிகளோடு தலைவன் தலைவியின்
காதலைப் புலவர் இணைத்துக் கூறுகிறார். தலைவனுடைய ஊரில்,
வேரில் பழுக்கும் வேர்ப்பலா மரங்கள் மூங்கில் வேலியுடன்
பாதுகாப்பாக உள்ளன. அந்தப் பழங்கள் வேரில் பழுப்பதால்,
அவை பார்வைக்கு மறைவாகவும், கீழே
விழுந்து உடைந்து சிதறும் வாய்ப்பு இல்லாதனவாகவும் உள்ளன. ஆனால், தலைவியின் ஊரில், மலைப்பக்கத்தில் உள்ள பலா மரங்களில், பழங்கள்
கொம்புகளில் பழுக்கின்றன. அந்த மரங்களுக்குப் பாதுகாப்பாக வேலி இல்லை. அந்த மரத்துப்
பழங்கள், கொம்புகளிலிருந்து கீழே விழுந்து உடைந்து சிதறக்
கூடியவை. தலைவனின் காதல் வேலிக்குள் பாதுகாப்பாக
இருந்துகொண்டு, கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும்
வேர்ப்பலாவின் பழம் போன்றது. அவன் பாதுகாப்பானவன்.
அவன் செயல் யாருக்கும் தெரியாது. ஆனால்,
தலைவியின் காதலோ சிறிய கிளையில் இருந்து தொங்கும்
பாதுகாப்பில்லாத பெரிய பலாப்பழத்தைப் போன்றது. பாதுகாப்பில்லாததால்
அவளை வேறு ஒருவர் திருமணம் செய்துகொள்ளக் கூடும். பழத்தின்
சுமை தாங்காமல் சிறிய கிளை முறிவதைப் போல் அவள் இறக்கவும் கூடும். முதிர்ந்த பழம் கீழே விழுந்து சிதறினால் அதன் மணம் பரவுவதைப் போல்,
அவளுடைய காதலைப் பற்றிய அலர் (பழிச்சொல்)
ஊரில் பரவத் தொடங்கலாம்.
இத்தனை கருத்துகளையும்
இச் சிறிய பாடலில் புலவர் இத்தனை சிறப்பாகக் குறிப்பிட்டிருப்பது அவருடைய கற்பனை வளத்திற்கும்
புலமைக்கும் சிறந்த சான்று.
Comments
Post a Comment